Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 200 - சூரிய மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்




ஆமென்ற ரவிதிசையில் ராகுபுத்தி
ஆகாதமாதம் பத்து நாள் மூவெட்டாகும்
போமென்ற அதன்பலனைப் புகலக்கேளு
பொன்னோடு பெண்ணதுவும் நாசமாகும்
நாமென்ற சத்துருவால் சண்டையுண்டாம்
நலமில்லா வியாதியது பீடிப்பாகும்
தாமென்ற மனைவியரைப் பிரித்து வைக்கும்
தகவில்லா நாளென்று தனித்து நில்லே


இன்னும் இச்சூரிய மகாதிசையில் கரும்பாம்பு எனக் கூறப்படும் இராகுவின் பொசிப்புக் காலம் மிக ஆகாத தொன்றேயாகும். இவனது பொசிப்புக் காலம் பத்து மாதம் இருபத்தி நான்கு நாள்களாகும். இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன: பொன் பொருள் சேதமாகும். பெண்நாசமும் உண்டாகும். சத்துருக்களுடன் சண்டையிடுதல் போன்ற தீயன நிகழும். உடல் நலத்தைப் பீடிக்கும். கொடிய வியாதிகள் வந்தடையும், மனைவி மக்களைப் பிரிந்து வாழச் செய்யும். இவனது பொசிப்புக் காலத்தை நலமில்லாத நாள்களே என்று துணிந்து சொல்லுக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சூரிய மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment