Wednesday 8 August 2012

பரணி கார்த்திகையில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?


மேஷ ராசியிலேயே பரணி நட்சத்திரக்காரர்கள் எந்தவொரு விஷயத்திற்கும் உடனடியாக ரீயாக்ட் செய்வார்கள். கோடு போட்டால் ரோடு போடும் குணத்தை பள்ளிப் பருவத்திலேயே காணலாம். இந்த நட்சத்திரத்தை சுக்கிரன் ஆள்கிறார். எனவே எப்போதும் பரபரப்பும் துறுதுறுப்பும் இருக்கும். படிப்பை விட ஆடல், பாடல், கதை என கலைகளில் ஆர்வம் காட்டி ஜெயிக்கவும் செய்வார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் வாழ்க்கை ரம்யமாகச் செல்லும். ‘‘பையன் படிக்கவே வேணாம். அவன் கிட்ட இருக்கற திறமைக்கு எதிர்காலத்துல பெரிய பாடகராவோ, நடிகராவோ வந்துடுவான்’’ என்று பள்ளிப் பருவத்திலேயே சொல்லி விடுவார்கள். சுக்கிரன் மறைந்தாலோ, அல்லது பலவீனமாக இருந்தாலோ கொஞ்சம் குழம்பியபடி இருப்பார்கள். கூடா பழக்கத்தால் பாதை மாறுவார்கள். குடும்பக் கஷ்டம் தெரியாமல் வளர்வார்கள். விவரம் தெரியாமல் ஏதாவது வில்லங்கத்தில் சிக்கிக் கொள்வார்கள்.

பரணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 19 வயது வரை சுக்கிர தசைதான் நடக்கும். கௌரவமாக மதிப்பெண் எடுப்பார்கள். எப்போதும் நண்பர்களால் சூழப்பட்டு இருப்பார்கள். சின்ன வயதிலேயே பிரபலமாக முயற்சிப்பார்கள். தடங்கல் இல்லாமல் படிப்பு நகரும். பள்ளியில் எல்லாப் போட்டிகளிலும் இவர்கள் பெயர் இருக்கும். எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளத் துடிப்பார்கள். எதையும் மிகைப்படுத்திப் பார்க்கும் குணமும் இருக்கும். 10ம் வகுப்பு படிக்கும்போது நிறைய நண்பர்கள் இருப்பார்கள். பிறகு காதலால் கவனம் சிதறும். எனவே, ஜாக்கிரதையாக இருங்கள். பெற்றோர் சரியான வழிகாட்ட வேண்டும். ஏனெனில், இந்த காலகட்டம்தான் சுக்கிர தசையின் இரண்டாம் பாகமாக இருக்கும். சுக்கிரன் அதீதமாக ஆளுவார். ஹார்மோன்களின் கலாட்டா மிதமிஞ்சியிருக்கும். கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும்போது சூரிய தசை தொடங்கும். கொஞ்சம் நிதானம் பெறுவார்கள். அரசியல், நிர்வாகம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். மருத்துவத் துறையில் கண், நரம்பு, முகம் சம்பந்தமான துறை சரியாக வரும். எம்.பி.ஏ. படிப்பில் ஹெச்.ஆர். துறை ஏற்றது. பொறியியல் எனில் சிவில் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும்.


இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களிடம் சூட்சும புத்தி அதிகம் இருக்கும். சிறிய வயதிலிருந்தே எதிலும் வேகம் காட்டுவார்கள். நாலு பேருக்கு முன்னால் அடித்தாலோ, திட்டினாலோ தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக் கொள்வார்கள். கணக்கு எப்போதும் சவாலாக இருக்கும். ஆசிரியர் சரியாக சொல்லித் தரவில்லை என அவ்வப்போது நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆசிரியரைப் பொறுத்து அந்தந்த பாடங்களில் கவனம் காட்டுவார்கள். யாரேனும் ஒருவரை முன்மாதிரியாகக் கொண்டு வளர்வார்கள். 12 வயது வரை சுக்கிர தசை நடப்பதால் பள்ளிப்பருவம் மறக்க முடியாததாக இருக்கும். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கல்வித் தடை வந்து நீங்கும். ஹாஸ்டலா, வீடா என்று வீட்டிலுள்ளோர் குழப்புவார்கள். 13 வயது முதல் சூரிய தசை நடக்கும்போது உலக அனுபவங்களும், ஒரு பெரிய மனுஷத்தனமும் வரத் தொடங்கும். ‘‘விளையாட்டுப் பிள்ளையா இருந்தான். அப்படியே மாறிட்டானே’’ என்று வியப்பார்கள். பள்ளியிலும், கல்லூரியிலும் பொருளாதாரம், புள்ளியியல் போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுங்கள். அதேபோல கட்டிட திட்ட வரைபடத் தயாரிப்பு, ஆர்க்கிடெக்ட், விஸ்காம் போன்றவையும் வளமான எதிர்காலம் தரும். கலைத்துறை எனில் ஓவியம் மிக நன்று.

மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களிடம் அழகும் அறிவும் சேர்ந்திருக்கும். எல்லோரும் விரும்பும் பிள்ளையாக இருப்பார். பேசுவதே பாடுவது போலிருக்கும். சிறிய வயதிலேயே மேடைகளில் அசத்துவார்கள். வயதுக்கு மீறி பல விஷயங்களைப் பேசுவதால், அதிகப் பிரசங்கி என்று பெயர் வாங்குவார்கள். 4ம் வகுப்பு படிக்கும்போதே சூரிய தசை தொடங்கி விடும். குடும்பம் கொஞ்சம் கஷ்டத்தில் தள்ளாடும். படிப்பும் கொஞ்சம் பாதிக்கும். புத்தகக் கல்வியை விட வாழ்க்கைக் கல்வியைத்தான் நன்றாகப் படிப்பார்கள். ‘‘படித்துதான் பெரிய ஆளாகவேண்டும் என்பதில்லை’’ என்று அடிக்கடி கூறுவார்கள். கலைத்துறை மீது எப்போதும் ஒரு கண் இருக்கும். ஃபேஷன் டெக்னாலஜி, விஸ்காம், டி.எஃப்.டெக். போன்ற படிப்புகள் எதிர்காலத்தை பிரகாசமாக்கும். இசைப்பள்ளியில் படித்து அங்கேயே ஆசிரியராகும் வாய்ப்பும் கிடைக்கலாம். இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அரசு வேலையும் கிடைக்கும். கட்டிடப் பணிகளில் கோயில், பூங்கா போன்றவை சிறப்பு தரும்.


நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள். சராசரியாகத்தான் படிப்பார்கள். பள்ளியில் சேர்த்த உடனேயே சுக்கிர தசை முடிந்து சூரிய தசை ஆரம்பித்து விடும். ‘‘ஸ்கூலுக்கு ஒழுங்கா வர்றான்; போறான். அதுல ஒண்ணும் குறை இல்லை. ஆனா, மார்க் மட்டும் வரமாட்டேங்குது’’ என்பார்கள். நோட்டுக்கு அட்டை போடுவது முதல் வகுப்பறை ஒழுக்க நியதிகள் வரை எதிலுமே குறை கூற முடியாது. பத்தாம் வகுப்பில் மரியாதைக்குரிய மதிப்பெண் பெறுவார்கள். பன்னிரெண்டாம் வகுப்பை விட கல்லூரியில் சிறந்து விளங்குவார்கள். ‘‘இன்னும் பத்து மார்க் கூட எடுத்திருந்தா அந்த கோர்ஸ் கிடைச்சுருக்கும்’’ என்பதுபோல பல விஷயங்கள் இவர்களை விட்டு நழுவும். ஆனாலும் சிவில், எலெக்ட்ரானிக்ஸ் எடுத்துப் படிக்கலாம். மருத்துவத்தில் ஆர்த்தோ, பல், பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற படிப்புகள் ஏற்றதாகும். நிர்வாகம் சார்ந்த இளங்கலை படிப்பு பெரிய பதவி வரை கொண்டு போய் நிறுத்தும். அதனால் கவனமாக தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வலிமை மிகுந்த அம்பாள் சந்நதியோடு, சரஸ்வதி தேவி வீற்றிருக்கும் தலத்திற்குச் சென்று வணங்குவது கல்வித் திறனை பெருக்கும். மேலும், சைவக் குருக்களோ அல்லது ஆச்சார்யர்களோ தரிசித்து பேறு பெற்ற தலமாக இருப்பின் புத்தியின் தீட்சண்யம் இன்னும் கூடும். அப்படிப்பட்ட தலமே வேதாரண்யம் ஆகும். இங்குள்ள ஈசனுக்கு வேதாரண்யேஸ்வரர் என்றும், அம்பாளுக்கு யாழைப்பழித்த மொழியம்மை என்றும் பெயர். இத்தலத்து அம்பாளின் வாக்கானது தன் வீணையின் நாதத்தை விட அழகானதும், ஈடு இணையற்றும் இருப்பதால் சரஸ்வதி இங்கு வீணையில்லாது வீற்றிருக்கிறாள். நாகை மாவட்டத்திலுள்ள இத்தலத்திற்கு சென்று அம்பாளையும், சரஸ்வதியையும் தரிசித்து வாருங்கள். சம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசரும் பதிகம் பாடித் திறந்த திருக்கதவை தரிசியுங்கள். உங்களுக்குள்ளும் ஒரு விவேகக் கதவு திறப்பதை உணர்வீர்கள்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சூரியனின் முழுசக்தியும் வெளிப்படும். செவ்வாய், மற்றும் சுக்கிரனின் சக்தியும் இணைந்து வருவதால், மிடுக்கும் வசீகரமும் கலந்தே இருக்கும். பத்தாம் வகுப்பிலேயே கல்லூரி முடித்த தெளிவோடு இருப்பார்கள். எல்லா விஷயங்களையும் எளிதாகவும், திட்டமிட்டும் செய்வார்கள். பள்ளிப் பருவத்திலேயே இவர்களைச் சார்ந்து நாலு பிள்ளைகள் இருப்பார்களே தவிர, இன்னொருவரை சார்ந்து இவர்கள் இருக்க மாட்டார்கள். எத்தனை நண்பர்கள் இருந்தாலும் ஓரிருவரைத்தான் அருகில் சேர்ப்பார்கள். படிப்பை விட ஒழுக்கத்திற்குத்தான் முதலிடம் கொடுப்பார்கள். அதேசமயம் படிக்கவும் செய்வார்கள். தலைவலி, பார்வைக் கோளாறு, பல்வலி போன்றவை சிறிய வயதிலேயே வந்து நீங்கும்.

முதல் பாதத்தில் பிறந்தவர்கள் பளிச் தோற்றத்துடன், மெலிந்து, உயரமாக இருப்பார்கள். சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டியிருக்கும். பள்ளியில் படிக்கும்போதே வகுப்புத் தலைவர் முதல் பள்ளித் தலைவர் வரை பதவிகள் வரும். நல்ல கல்வி நிறுவனத்தில் தந்தை சேர்ப்பார். மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமாராகத்தான் படிப்பார்கள். ஆனால், எல்லா வகுப்பிலும் குறிப்பிட்ட ஒரு சப்ஜெக்ட்டில் மட்டும் தொடர்ந்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள். அதன்பிறகு கல்லூரி முடிக்கும் வரை எல்லாவற்றிலும் முதலிடம்தான். கல்லூரியில் என்ன படிக்கிறார்களோ அதுதான் வாழ்க்கையை நிர்ணயிப்பதாக இருக்கும். நிர்வாகம், அரசியல், சிவில் எஞ்சினியரிங், எலெக்ட்ரிகல், விண்வெளி ஆராய்ச்சி குறித்த படிப்புகள் வளமான எதிர்காலம் தரும்.

இரண்டாம் பாதம் மற்றும் மூன்றாம் பாதத்துக்கு பலன்களில் மிகச் சிறிய வித்தியாசம்தான். மூன்றாம் பாதம் கொஞ்சம் மெதுவாக இருக்கும். அவ்வளவுதான். ஆனால், விவேகத்தைப் பொறுத்தவரை இருவரும் ஒன்றுதான். பள்ளியில் ஆங்கிலத்தில் சிறப்பான ஈடுபாடு காட்டுவார்கள். தனக்கென்று தனிக் கூட்டத்தை உருவாக்குவார்கள். இங்குதான் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களுக்காக சில தியாகங்கள் செய்வார்கள். இதனால் பள்ளிப் படிப்பையே கோட்டை விடும் ஆபத்து உள்ளது. ஆனால், பத்தாம் வகுப்பு தாண்டி விட்டால் எந்தப் பிரச்னையும் இருக்காது. அதன்பின் கல்லூரி முடியும் வரை செவ்வாய் தசை இருப்பதால் கெமிக்கல், சிவில், எம்.பி.ஏ. போன்றவை மிகச் சிறந்த வாழ்க்கையை அமைத்துத் தரும். பொறியியல் துறையில் எலெக்ட்ரானிக்ஸ் சிறந்தது. கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை ஆர்வமிகுதியால் படித்து விட்டு, பிறகு தொழிலுக்காக வேறு படிப்பையும் படிப்பார்கள். கேட்டரிங் டெக்னாலஜி தேர்ந்தெடுத்தால் ஒரு ஓட்டலுக்கே அதிபராகலாம்.

நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள், தங்கள் பரம்பரையில் யார் யார் என்னென்ன படித்தார்கள் என்று பார்த்து வைப்பார்கள். பதினோரு வயது வரை தாய்வழி சொந்தங்கள் இவர்களின் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். சிறு வயதிலேயே பெரிய லட்சியத்தோடு வளர்க்கப்படுவார்கள். பள்ளியிறுதியிலேயே ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு வகுப்புகளுக்குக்கூட செல்வார்கள். கல்வியில் முக்கிய கட்டமான எட்டாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை படிப்பில் நம்பர் ஒன்னாக இருப்பார்கள். அரசு வேலைக்குத் தகுந்த மாதிரி படிப்பார்கள். சிலருக்கு வேலையும் கிடைத்து விடும். ஐ.ஏ.எஸ். இவர்களுக்கு வெற்றி தரும். மருத்துவத்துறையில் வயிறு, இ.என்.டி. போன்ற படிப்புகளில் சிறப்பாக செயல்படுவார்கள். படித்த கல்லூரியிலேயே பேராசிரியராக வரும் வாய்ப்பு அதிகம் உண்டு. அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் அமர்ந்திருப்போரின் செயல்பாடுகளை இவர்கள்தான் தீர்மானிப்பார்கள். சொந்த ஜாதகத்தில் சூரியனும், குருவும் பலவீனமாக இருந்தால் கல்வித் தடை ஏற்பட்டு சிரமப்படுவார்கள். ஆனால், பொதுவாக கல்வி விஷயத்தில் சிறந்தே விளங்குவார்கள்.

கார்த்திகை நட்சத்திரத்தை சூரியன் ஆட்சி செய்கிறது. எனவே, சூரியன் பூஜித்த தலங்களை வணங்கினால், கல்வித்தடைகள் நீக்கும். அப்படிப்பட்ட தலமே திருக்கண்டியூர் பிரம்மசிர கண்டீஸ்வரர் ஆலயமாகும். இங்கு பிரம்மாவுக்கு தனி சந்நதி அமைந்துள்ளது. அவருடன் சரஸ்வதி தேவியும் அருள்புரிகிறார். இவ்வாறு படைப்புக் கடவுளும், கல்விக் கடவுளும் தம்பதியாக அருள் புரிவது அரிதான ஒன்று. கூடவே சூரியனும் பேறு பெற்ற இடம் என்பதால், இத்தலத்தை வணங்க கல்விச் செல்வம் பெருகும். இத்தலம் தஞ்சாவூர் - திருவையாறு பாதையில் அமைந்துள்ளது.  

No comments:

Post a Comment