Wednesday 8 August 2012

ஜாதகப்படி குழந்தை பாக்யம் எப்படி?



                                                                                                                     
ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும்போதும் ‘பதவி பூர்வ புண்ணியானாம்’ என்ற முக்கியமான சொற்றொடரைச்
சொல்வார்கள். அதாவது நம்முடைய இந்தப் பிறவிப் பயன், யோகம், அதிர்ஷ்டம், பாக்யம், அம்சம் எல்லம் நம் பூர்வ ஜென்ம புண்யத்தால் ஏற்பட்ட கர்ம வினைப்படியே அமையும் என்பதாகும். திருமண பந்தம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் இன்றியமையாதது. ஆணோ, பெண்ணோ அவர்களின் பிறப்பின் அர்த்தமே திருமண யோகத்தில்தான் உள்ளது.

அதையடுத்து அந்த பந்தத்தின் மூலம் வாழையடி வாழையாக சந்ததிகள் என்ற புத்திர பாக்யம் மிகவும் அவசியமாகிறது. ஆகையால்தான் பெரியோர்கள்,
ஆன்றோர்கள், சான்றோர்கள் திருமண நாளிலோ, சுப விசேஷங்களிலோ வாழ்த்தும்போது, பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.

‘கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஓர்துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் வேண்டும்’
என்பதே அந்த பதினாறு பேறுகளாகும்.

இந்தப் பேறுகள் எல்லாம் சற்றுக் கூடுதலாகவோ, குறைவாகவோ அவரவர் பிராப்தப்படி கிடைக்கிறது. சில பேறுகள் பலருக்கு கிடைக்காமல் போய் விடுகிறது.

ஆனால் இதில் மிக முக்கியமாக எல்லோராலும் விரும்பப்படுவது வாரிசு எனப்படும் புத்திரப் பேறாகும். ஆகையால்தான் அபிராமி பட்டர் அம்பாளிடம் கேட்கும்போது தவறாத சந்தானம் வேண்டும் என்று கேட்டார். அதாவது மற்ற பேறுகள் எல்லாம் தவறினாலும் பாதகமில்லை; புத்திர பாக்யம் எனும் சந்தான பிராப்தி தவறாமல் கிடைக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

குழந்தை பாக்கியமும் - ஜோதிடமும்

திருமணத்திற்கு பின்பு சில பெண்களுக்கு பத்தாவது மாதத்திலேயே இந்த பாக்கியம் கிடைத்து விடுகிறது. ஒரு சிலருக்கு ஒரு வருடமோ, இரண்டு வருடமோ தள்ளி குழந்தை யோகம் அமைகிறது. இன்னும் சிலருக்கு 8, 10 வருடங்கள் கழித்துதான் குழந்தைபேறு கிடைக்கிறது. சிலருக்கு குழந்தை பாக்யம் இல்லாத
நிலையும் ஏற்பட்டு விடுகிறது. ஒரு சிலருக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதன்பிறகு ஆண் வாரிசுக்காக தவியாய்த் தவித்தாலும் அது கிடைப்பதில்லை. அதேபோல் முதலில் ஆண் குழந்தை பிறக்கும் தம்பதியர்களுக்கு பிறகு பெண் குழந்தை பாக்யம் ஏற்படுவதில்லை. அப்படியே கர்ப்பம் தரித்தாலும் அது தங்காமல் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு எல்லாம் என்ன காரணம்? எல்லா விஷயங்களுக்கும் ஜோதிட சாஸ்திரம் ஒரு
திறவுகோலாக இருப்பதால், இந்த விஷயத்தில் ஜாதக கட்டம் என்ன சொல்கிறது?

ஜாதகத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை

ஜாதக கட்டம் ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆதிபத்யம் உள்ளது. அந்த வகையில் ஐந்தாம் இடம், குழந்தை பாக்யத்தைக் குறிக்கும். அந்த வீட்டின் அதிபதியும் மிக
முக்கியம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தையும், ஒன்பதாம் இடத்தோடு, நான்காம் வீட்டையும் பார்க்க வேண்டும். இந்த 4, 5, 9 ஆகிய வீடுகள் (ராசிகள்) பலம் பெற்றும் அந்த வீட்டிற்குடைய கிரகங்கள் நீச்சம் அடையாமலும் 6, 8, 12ல் மறையாமலும் இருப்பது அவசியமாகும். நீச்ச கிரகத்துடன் சேராமல் இருப்பது மிக முக்கியமாகும்.

ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் குரு, செவ்வாய், சுக்கிரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். குருவிற்கு புத்திர பாக்யம் தருவதில் மிக முக்கிய பங்கு
உண்டு. ஏனென்றால் குரு புத்திர காரகன் ஆவார். அதாவது புத்திர யோகத்தை தரக்கூடிய அதிகாரம் பெற்றவர். மேலும், போககாரகனும்கூட. அதாவது தம்பதிகளின் தாம்பத்தியத்தில் சம்போகம் எனும் போகசக்தியை தரக்கூடியவர். செவ்வாய் அருளால்தான் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியும்.

பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவர் இவர். பெண்கள் பூப்பெய்துவதற்கும் இவரே முக்கிய காரணம். ரத்த சம்பந்தமான நோய்கள் இவர் மூலம் உண்டாகும்.

சுக்கிரன், சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளச் செய்பவர். திகட்டாத தாம்பத்யத்தையும் ஈர்ப்பு சக்தியையும் தரக்கூடியவர் ஆண்களின் சுக்கிலத்திற்கும் பெண்களின்
சுரோணிதத்திற்கும் இவரே காரண கர்த்தா. ஒரு தம்பதியின் ஜாதகங்களில் இந்த மூன்று கிரகங்கள் நல்ல வலிமையுடன் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் பெற்று நல்ல அம்சத்தில் இருந்தால் விரும்பிய புத்திர யோகம் தானாக கூடிவரும்.

புத்திர பாக்ய தடை ஏற்படுத்தும் அமைப்புகள்

ஆண், பெண் இருவரின் ஜாதகங்களிலும் ஏதாவது குறை இருந்தால்தான் குழந்தை பாக்யம் தடைபடும். இருவரில் ஒருவருக்கு பலம் இருந்தால் தடைகள் நீங்க
வாய்ப்புண்டு. லக்னத்திற்கு ஐந்தாம் இடம் புத்திரபாக்யம் தரும் இடம். ஐந்தாம் அதிபதி புத்திர ஸ்தானாதிபதியாவர். இந்த இரண்டும் பலமாக இருப்பது
அவசியம். ஐந்தாம் இடத்தில் ராகு-கேது இருந்தால் புத்திரதோஷம்; நீச்சக் கிரகம் இருந்தால் புத்திர தடை; 6, 8, 12ம் அதிபதிகள் இருந்தால் கருச் சிதைவு; இரண்டுக்கு
மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் தாமதம்; ஐந்தாம் அதிபதி நீச்சம் அடைந்தால் புத்திர தோஷம்; ஐந்தாம் அதிபதி ராகு-கேதுவுடன் சேர்ந்தால் புத்திரத்தடை;
ஐந்தாம் அதிபதி நீச்சக் கிரகத்துடன் சேர்ந்தால் புத்திரதோஷம்; ஐந்தாம் அதிபதியும் குருவும் பலவீனமடைந்தால் புத்திர தடை; ஐந்தாம் இடத்தில் குரு இருந்தால் தாமதமாக குழந்தை பிறக்கும்; குரு புதன் வீடான மிதுனம், கன்னியில் இருந்தால் தாமத புத்திர பாக்கியம்; ஐந்தாம் இடத்தில் சூரியன் இருந்து செவ்வாய் பார்த்தால் கருச்சிதைவு; ஐந்தாம் இடத்தை ரிஷபம், கடகம், துலாம் ஆகி சுக்கிரன், சந்திரன் பார்த்தால் பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும். ஆண் ஜாதகத்தில் விருச்சிக ராசியில் சூரியன், சுக்கிரன் சேர்ந்து இருந்தால் புத்திர தடை. ஐந்தாம் அதிபதியும்-ராகுவும் சேர்ந்து 6, 8, 12ல் இருந்தால் தத்து புத்திரயோகம். ஆண்கள் ஜாதகத்தில் நபும்ஸ கிரகங்கள் என்று சொல்லப்படும் அலித்தன்மையுடைய கிரகங்களான புதனும், சனியும் சேர்ந்து லக்னம், மூன்று, ஏழு ஆகிய இடங்களில் இருந்தாலும், பார்த்தாலும் விந்தணு குறைபாடுகள், வீரியக் குறைவு ஏற்படும். இதனால் குழந்தை பாக்ய தடை ஏற்படலாம். அல்லது அங்கம் குறை உள்ள குழந்தை பிறக்கும்.

குழந்தை பிராப்தம் கிடைக்கும் காலம்

எல்லா கிரக அம்சங்கள், யோகம், பிராப்தம் இருந்தாலும் அதை அனுபவிக்கக்கூடிய நேரம், காலம் வரவேண்டும். குழந்தை யோகமும் அப்படித்தான். கணவன், மனைவி இருவருக்கோ அல்லது ஒருவருக்கோ லக்னாதிபதி, நான்காம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் தசா, புக்தி, அந்தரங்களில் குழந்தை பாக்யம் கூடி வரும். ராகு-கேது திசைகளில் யோகாதிபதிகளின் புக்தியில் சந்ததி விருத்தி ஏற்படும். மற்ற தசாபுக்திகளில் தடைகள், கர்ப்பச்சிதைவு ஏற்பட்டால் உரிய பரிகார தலங்களுக்கு செல்வதன் மூலம் சத்புத்திர யோகம் கிடைக்கும்.

கர்ப்ப பிராப்தம் தரும் பரிகார தலங்கள்

* கரு தந்து காத்திடும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில், கும்பகோணம்-தஞ்சை சாலையில் பாபநாசம் அருகே உள்ளது. குழந்தை பாக்யதடை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள் இத்தலத்து அம்பாளை பிரார்த்தித்து, இங்கு தரப்படும் பசுநெய், விளக்கெண்ணெய் பிரசாதத்தை முறைப்படி அருந்திவர தோஷ நிவர்த்தி ஏற்பட்டு புத்திரயோகம் கிட்டும்.

* கரு வளர்க்கும் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கும்பகோணம்-திருவாரூர் சாலையில் மருதாநல்லூர்
கிராமத்தை அடுத்து உள்ளது. இத்தலத்து அம்மனை பிரார்த்தித்துக் கொள்ள புத்திர பாக்யம் உண்டாகும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் மிகவும் சக்தி
வாய்ந்தது.

* ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாளில், சென்னையை அடுத்துள்ள திருவாலங்காடு சென்று சிவனை பிரார்த்தித்து, அன்றைய தினம் தாம்பத்ய உறவு
கொண்டால் சத்புத்திர யோகம் உண்டாகும்.

* கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் நீடாமங்கலம் பேருந்து நிலையத்திற்கு அருகில் புத்திர பிராப்தி தரும் சந்தானராமன் ஆலயம் உள்ளது. இங்கு ராமபிரான் சந்தான யோகம் தருகிறார். இங்கு ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திர நாளில் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும்போது ராமனை வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

No comments:

Post a Comment