Wednesday 8 August 2012

திருவோணம், அவிட்டத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?


மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் இடம் பெறுகின்றன. திருவோணத்தின் அதிபதி சந்திரன். எனவே இவர்களுக்கு இளம் வயதிலிருந்தே அநாயாசமான கற்பனைத்திறன் இருக்கும். அடுக்கடுக்கான யோசனைகள் வந்து கொண்டே இருக்கும். ‘ஓணத்தில் பிறந்தவர் கோணத்தை ஆள்வார்’ என்கிற பழமொழி வேறு இருக்கிறது.

திருவோணத்தின் முதல் பாதத்தை மேஷச் செவ்வாய் ஆள்கிறார். ஏறக்குறைய 9 வயது வரை சந்திர தசை இருக்கும். சிறிய வயதிலேயே திறமைகள் வெளிப்படத் தொடங்கும். 10 வயதிலிருந்து 16 வரை செவ்வாய் தசை நடைபெறும்போது கொஞ்சம் எச்சரிக்கை தேவை. ராசிநாதனான சனிக்கு செவ்வாய் பகையாக வருவதால், பள்ளி மாற்றம், அலைச்சல் என வாழ்க்கை நகரும். இப்படி பல காரணங்களால் சரியாகப் படிக்காமல் இருப்பார்கள். ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளில்தான் ஆர்வம் அதிகமிருக்கும். பத்தாம் வகுப்பில் மரியாதையான மதிப்பெண்கள் எடுப்பதே பெரிய விஷயம்.

17 வயதிலிருந்து 35 வயது வரை ராகு தசை நடைபெறும். பிளஸ் 2வில் அறிவியல் படித்து விட்டு, ‘‘என்னை பி.பி.ஏ. சேர்த்து விடுங்கள்’’ என்பார்கள். ஏதேனும் குறுகிய கால கோர்ஸ் படிப்பார்கள். அதுதான் அவர்களுக்கு உதவும்படியாக அமையும். ராகு தசையில் பல மொழிகளில் வல்லமை வரும். கெமிக்கல், எலெக்ட்ரிகல், விவசாயம், சிவில் என்று சேர்வது நல்லது. மருத்துவத்தில் எலும்பு, பல் சம்பந்தமான துறை கிடைத்தால் உடனே சேரலாம். இவர்களிடம் மிதமிஞ்சிய நிர்வாகத்திறன் இருப்பதால் மார்க்கெட்டிங் மேலாண்மை, செகரட்டரியல், வங்கி மேலாண்மை எனவும் முயற்சிக்கலாம்.

இரண்டாம் பாதத்தை ரிஷபச் சுக்கிரன் ஆள்கிறார். யானை பலத்தோடு இருப்பார்கள். பொதுவாகவே திடீர் அதிர்ஷ்டம் இருக்கும். ஏறக்குறைய 6 வயது வரை சந்திர தசை நடக்கும். 7 வயதிலிருந்து 13 வரை நடக்கும் செவ்வாய் தசையில் இவர்களின் அதிர்ஷ்டக்காற்று பெற்றோர் மீது வீசும். சிறிய வயதிலேயே ஓவியப் போட்டி, மாற்றுடைப் போட்டி, மேடை நாடகம் என்று ஈடுபடுவார்கள். சுக்கிரன் பாதத்தின் அதிபதியாக இருப்பதால், கஷ்டப்பட்டெல்லாம் படித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். குறை சொல்ல முடியாத அளவுக்கு மதிப்பெண்கள் எடுப்பார்கள். இதற்கடுத்து வரும் ராகு தசையும் நன்மை தரக் கூடியதாகவே இருக்கும். பாதத்தின் அதிபதியான சுக்கிரன் பிரபல யோகாதிபதியாக வருவதால், எது நடந்தாலும் அது நல்லதில் முடியும்.

14 வயதிலிருந்து 31 வரை ராகு தசை நடைபெறும். சந்திரனுடைய நட்சத்திரத்தில் ராகு தசை வருகிறது. புத்தியில் ஆழமும், அகலமும் இருக்கும். ஆனால், பத்தாம் வகுப்பு படிக்கும்போது ‘எப்போது பள்ளி வாழ்க்கை முடியும்’ என்கிற அளவுக்கு பிரச்னைகளில் சிக்குவார்கள். புற்றுள்ள அம்மனை வேண்டினால் பிரச்னை கரையும். 12ம் வகுப்பில் பொறுப்பு வந்துவிடும். இவையெல்லாமே அவரவர் சொந்த ஜாதகத்தில் ராகுவின் நிலையை வைத்தும் நடக்கும். எலெக்ட்ரானிக்ஸ், ஏரோநாட்டிகல், விஸ்காம், ஃபேஷன் டெக்னாலஜி, பிரின்டிங் டெக்னாலஜி, சோஷியாலஜி, சைக்காலஜி போன்றவற்றில் நல்ல எதிர்காலம் உண்டு. மருத்துவத் துறையில் நியூராலஜிஸ்ட், முதுகுத் தண்டுவடம் சார்ந்த துறைகளில் வெகு எளிதாக நிபுணராகும் வாய்ப்பு உண்டு.

மூன்றாம் பாதத்தை மிதுன புதன் ஆள்வதால் புத்தியில் தீட்சண்யம் அதிகமாக இருக்கும். கிட்டத்தட்ட 4 வயது வரைதான் சந்திர தசை நடக்கும். 5 வயதிலிருந்து 11 வரை செவ்வாய் தசை இருப்பதால் தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். பிறரோடு ஒப்பிட்டு இவர்களைப் பேசக்கூடாது. ஏதேனும் ஒரு சப்ஜெக்ட்டில்தான் கவனம் செலுத்துவார்கள். சிலர் அடிக்கடி பள்ளி மாறிக் கொண்டேயிருப்பார்கள். 12 வயதிலிருந்து 29 வரை ராகு தசை நடக்கும்போது, அபரிமிதமான படைப்பாற்றல் வெளிப்படும். கல்லூரியில் இவர்கள் ஆராய்ச்சி படிப்புகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

30 வயதிலிருந்து 45 வரை குருவின் அருளால் புத்தியில் தெளிவும் செம்மையும் கூடும். பாதத்திற்கு அதிபதியாக புதன் வருவதால் புள்ளியியல், சி.ஏ, சட்டம், எம்.பி.ஏ. கம்பெனி நிர்வாகம் சார்ந்த படிப்புகள் எல்லாமுமே ஏற்றவை. உளவியலும் சிறந்ததாகும். மருத்துவத்தில் இ.என்.டி, நரம்பு, வயிறு, ஜெனிடிக்ஸ் துறைகளில் தனித்துவம் பெற முடியும். நான்காம் பாதத்தில் பிறந்தவர்களை சந்திரன் ஆள்கிறார். நட்சத்திர அதிபதியும் சந்திரனாக வருவதால் சந்திரனின் இரட்டிப்புத் திறன் இவர்களிடம் செயல்படும். சந்திரன் அழகைத் தருவார்; அதேநேரம் உணர்ச்சிப் பிழம்பாகவும் இருப்பார்கள். 1 வயதிலிருந்து 8 வரை செவ்வாய் தசை நடக்கும். சிறிய வயதில் பெற்றோர்களுக்கும் சரி, இவர்களுக்கும் பெரிய கஷ்டமெல்லாம் இருக்காது.

9 வயதிலிருந்து 24 வரை ராகு தசை நடக்கும். பாதத்தின் அதிபதியான சந்திரனை ராகு கவ்வும். அதனால் சிறிய விஷயத்திற்கும் பெரிதாகக் குழம்புவார்கள். கொஞ்சம் தடுமாறி நிமிர்வார்கள். ராகு தசை நடைபெறுவதால் திடீரென்று 90 மார்க் எடுப்பார்; அடுத்த தடவை நாற்பதுதான் வரும். இப்படி ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், ஏதேனும் ஒரு சப்ஜெக்ட்டில் எப்போதுமே முதல் மாணவராக வருவார்கள். ஓரளவு நல்ல மதிப்பெண்களை எடுத்து 12ம் வகுப்பில் தேறுவார்கள். மாஸ் கம்யூனிகேஷன், மெரைன், ஆங்கில இலக்கியம், சட்டம், ஃபேஷன் டெக்னாலஜி என்று திட்டமிட்டு படித்தால் போதும். மருத்துவத்துறையில் பிளாஸ்டிக் சர்ஜரி படிக்க, நிபுணத்துவம் நிச்சயம்.

திருவோணக்காரர்களின் வாக்குக்கு அதிபதியாக சனி வருகிறது. எனவே பெருமாளை வணங்கினால் போதுமானது. அதிலும் ஊத்துக்காடு காளிங்கநர்த்தன கிருஷ்ணரை வணங்க, கல்வித் திறன் மேம்படும். கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. அவிட்ட நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் மகர ராசியிலும், 3, 4 பாதங்கள் கும்ப ராசியிலும் இடம்பெறுகின்றன. ‘தவிட்டுப்பானையும் தங்கமாகும்’ அளவிற்கு கைராசி உள்ளவர்கள். அவிட்டம் நட்சத்திரத்தின் ராசியாதிபதி சனி; நட்சத்திர அதிபதி செவ்வாய்.

முதல் பாதத்தை அதன் அதிபதியான சூரியன், இவர்களோடு சேர்ந்து ஆட்சி செய்கிறார். மூவரும் தன்னளவில் அரசர்கள்; ஒன்றையொன்று விஞ்சி செயல்படுவார்கள். ஆறு வயது வரை செவ்வாய் தசை நடக்கும்போது உடல் பலம் அதிகம் இருக்கும். இந்த தசை சாதாரணமாக செல்லும். ஆனால், 7 வயதிலிருந்து 24 வரை ராகு தசை நடக்கும்போதுதான் குடும்பச் சூழ்நிலையால் படிப்பில் கவனம் சிதறும். ராகு பாதி கெடுக்கும்; பாதி கொடுக்கும். 16 வயது வரை கொஞ்சம் சிரமப்படுத்தி அதற்குப் பிறகு கொடுக்கும்.

அதாவது பத்தாம் வகுப்பில் கைவிட்ட ராகு, பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்க வைப்பார். 24 வயதுக்குள் மற்ற எல்லோரையும் விட முதிர்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள். கல்லூரியில் சொல்லி வைத்தாற்போல படிப்பை தேர்ந்தெடுத்துப் படிப்பார்கள். பொலிட்டிகல் சயின்ஸ், எம்.பி.ஏ. படிப்பில் ஹெச்.ஆர்., அஸ்ட்ரானமி, பயோ மெடிக்கல் ஜெனிடிக்ஸ், மைக்ரோ பயாலஜி போன்ற படிப்புகள் நல்ல எதிர்காலத்தை தரும். மருத்துவத்தில் தலை, மயக்க மருந்தியல் படிப்புகளில் சிறப்பான எதிர்காலம் உண்டு.

இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களை செவ்வாய், சனி, புதன் கிரகங்கள் ஆள்வதால், சிறிய வயதில் ஏமாளியாக இருந்து பிறகு சமாளித்துக் கொள்வார்கள். 5 வயதிலிருந்து 22 வரை ராகு தசை நடைபெறும்போது வகுப்பில் இவர்களுக்கென்று தனி அடையாளம் இருக்கும். கல்லூரி முடியும் வரை படிப்பு விஷயத்தில் எந்த தொந்தரவும் இருக்காது. புதன் ஆதிக்கம் மிகுந்திருப்பதால், மற்றவர்களிடமிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவார்கள். 23 வயதிலிருந்து 38 வரை குரு தசை நடைபெறும். ஏழாம் வகுப்பில் படிப்பு கொஞ்சம் தடைபடும்; ஆனால், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள்.

கிரிமினாலஜி, சைபர் கிரைம் சம்பந்தமாக படிப்பது, இவர்களுக்குள் இருக்கும் சி.ஐ.டியை வெளிக்கொண்டு வரும். ரீடெயில் மார்க்கெட்டிங், அக்கவுன்டன்ஸி, விஸ்காம், பேங்கிங் சம்பந்தமான படிப்புகளும் நல்ல எதிர்காலம் தரும். மருத்துவம் எனில் நரம்பு, வயிறு, கண், செக்ஸ் சார்ந்த மருத்துவம் பெரிய அளவில் புகழ் தரும். எலெக்ட்ரானிக்ஸை விட எலெக்ட்ரிகல் நல்லது. அவிட்டம் மூன்றாம் பாதத்தின் அதிபதியாக சுக்கிரன் வருகிறார். இரண்டரை வருடம் வரை செவ்வாய் தசை நடைபெறும். 3 வயது முதல் 20 வரை ராகு தசை இருப்பதால் தாய், தந்தையின் வளர்ச்சி சட்டென்று மேலேறும். ராகு தசையின் ஆரம்பத்தில் ஏனோதானோ என்று இருந்தாலும், பிற்பகுதியில் நன்றாகப் படிப்பார்கள்.

கல்லூரியில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைப்பார்கள். எட்டாம் வகுப்பில் மட்டும் படிப்பில் கொஞ்சம் கவனம் சிதறும். 20 வயதில் ஏராளமான திறமைகளோடு வலம் வருவார்கள். தத்துவம், தாவரவியல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், விஸ்காம், ஆர்க்கிடெக்ட், ஃபேஷன் டெக்னாலஜி, சி.ஏ., எக்னாமிக்ஸ், டி.எப்.டி. போன்ற படிப்புகள் எளிதாக வெற்றி பெறச் செய்யும். சிறந்த சர்க்கரை நோய் நிபுணராகவும், பிளாஸ்டிக் சர்ஜரி, கால்நடை மருத்துவராகவும் வர வாய்ப்புள்ளது.

அவிட்டம் 4ம் பாதத்தின் அதிபதி செவ்வாய். ராசியாதிபதி சனி. நட்சத்திர அதிபதியும் செவ்வாயே வருகிறது. செவ்வாய் இரண்டு மடங்கு சக்தியோடு இருப்பார். ஒரு வயது வரை செவ்வாய் தசை இருக்கும். 2 வயதிலிருந்து 19 வரை ராகு தசை இருக்கும். 4 வயதில் பாலாரிஷ்டம் என்று சொல்வதுபோல் உடம்பு படுத்தும். பொதுவாக ராகுதசை நன்றாகத்தான் இருக்கும். ஓட்டப்பந்தயம், கால்பந்து போன்றவற்றில் மாநில, தேசிய அளவில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமுண்டு. பள்ளிப் பருவத்திலேயே குழு அமைத்து எல்லாப் போட்டிகளிலும் பங்கெடுப்பார்கள்.

பள்ளிப் படிப்பை சிலர் கொஞ்சம் தடையோடுதான் முடிப்பார்கள். 20 வயதிலிருந்து 35 வரை குரு தசை நடைபெறும். இரட்டைச் சக்தியோடு விளங்கும் செவ்வாய்க்கு குரு எப்போதும் நண்பர்தான். பள்ளிகளில் கொஞ்சம் தளரவிட்ட படிப்பை கல்லூரியில் பிடித்து விடுவார்கள். பொருளாதாரம், அக்கவுண்டன்ஸி, மைக்ரோ பயாலஜி, கெமிக்கல், ஆட்டோமொபைல், எலெக்ட்ரிகல் போன்றவை வளம் தரும். மருத்துவத்துறையில் ஆர்த்தோ, லேப் டெக்னாலஜி, பிசியோதெரபியை மறக்க வேண்டாம். அதற்கு செவ்வாய் நிச்சயம் உதவுவார்.

இந்த நட்சத்திரக்காரர்கள் சற்று உக்கிரமான பெருமாளை தரிசிக்க வேண்டும். அப்படிப்பட்ட தலமான சிங்கப் பெருமாள் கோயிலில் அருளும் பாடலாத்ரி நரசிம்மரை தரிசித்தல் நல்லது. இங்கு நரசிம்மருக்கு ஈசனைப் போன்று நெற்றிக் கண் உண்டு. இவரை தரிசிக்க, கல்வித் திறன் நிச்சயம் கூடும். இக்கோயில் சென்னை - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டிற்கு அருகேயே உள்ளது

No comments:

Post a Comment