Sunday 5 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 72


ஆரப்பா அஞ்சுபே ரொன்றுகூடி
அப்பனே மற்றவர்கள் ஒற்ற்ராமல்
கூறப்பா குன்றுகளில் தனித்திருக்க
கொற்றவனே குவலயங்க ளெல்லாமாள்வன்
பாரப்பா படைவீரர் ஜெனங்கள் மெத்த
பறக்குமடா கொடித்திரையும் கடலுக்கப்பால்
சீரப்பா செம்பொன்னும் விளையும் பூமி
சிக்குமடா புலிப்பாணி செப்பினேனே.


இன்னுமொன்றையும் அறிந்து கொள். ஐந்து கிரகங்கள் ஒன்றுகூடி ஒரு மனையில் இருக்க, மற்றவர்கள் கேந்திரத்தில் (குன்றுகளில்) தனித்து நிற்க அவன் உலகமெல்லாம் ஆளும் மன்னவன் என்றே கூறுக. அவனுக்கு நிறைந்த படை வீரர்களும், பக்தி செலுத்தும் மாந்தர் கூட்டமும் மெத்த உண்டு என்பதனையும், அவனுடைய கொடி திரைகடலுக்கு அப்பாலும் புகழுடன் பறக்கும் என்றும் செம்பொன்னும் விளைவயலும் பூமியில் அவனுக்கு வாய்க்குமென்றும் போகமா முனிவருடைய அருளாணையாலே புலிப்பாணி உரைத்திட்டேன்.

No comments:

Post a Comment