Saturday 4 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 60


பாரப்பா பதினைந்து நாளிலேயும்
பகருகின்ற பால்மதியும் வெய்யோனைத்தான்
சீரப்பா சீறியே அரவந்தீண்டில்
செத்திடுவர் போர்முகத்தில் அனந்தம்மன்னர்
ஊரப்பா ஊரெங்கும் பேதி அம்மை
உத்தமனே கவுமாரி யாலேசீக்கு
பாரப்பா மன்னர்களு மடியாவிட்டால்
மகத்தான அன்னமது அரிதாம், பாரே


இன்னொரு கருத்தையும் நன்கு கவனிப்பாயாக! வளருகின்ற கலையால் பதினைந்து நாள்களில் உயர்வு பெறும் சந்திரனையும் மற்றும் சூரியனையும் (இராகு கேது ஆகிய) பாம்பு சீறித் தீண்டும் சீர் பெறில் போர் முகத்தில் அனெகம் மன்னர் இறந்தொழிவர்; ஊரெங்கும் கொள்ளை நோயும், அம்மை பேதி போன்ற தீய வியாதிகளும் கெளமாரியின் கருணையினால் உத்தமனே வந்து வாய்க்கும். அவ்வாறு மன்னர்கள் மடியாவிடின் பெருமைக்குரிய அன்னமது கிடைப்பது அரிதாகிப் போகும்.

No comments:

Post a Comment