Friday 3 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 34 - இலக்கினத்தில் மாந்தி


காணப்பா இன்னுமொரு செயலைக்கேளு
கனமுள்ள குளியனுமே பதியில்நிற்க
ஆணப்பா அகம்பொருளும் நிலமுங்காடி
அப்பனே அயன்விதியும் தீர்க்கஞ்சொல்லு
கூணப்பா குளியனுமே துதியில்நிற்க
கொற்றவனே கலகனடா நேத்திரரோகன்
தாணப்பா தனவிரயம் தோடம் சொல்லு
தரணிதனில் துஷ்டனென்று கூறுகூறே


சோதிடம் கூறப்புகும் மகனே! இன்னுமொன்றையும் நன்கு உணர்ந்து கொள்வாயாக. சனியின் மைந்தனும் மாந்தி என்றும் குளிகன் என்றும் கூறப்படும் கிரகமானது லக்கினத்தில் அமைந்தால் அச்சாதகனுக்கு நல்ல மனை வாய்த்தலும் நிறைதனமும், நிலம் முதலியன அமைதலோடு அவனது விதியும் தீர்க்கமானதாக அமையும் என்று கூறுக. ஆனால் தனஸ்தானமான இரண்டாமிடத்தில் அமைய அவன் கலகன் எனவும் நேத்திர ஊனம் உறுவோன் என்றும் அதாவது கண்களில் ரோகம் பெறுபவன் என்றும், தனவிரயம் செய்வன் என்பது மட்டுமல்லாமல் தரணியில் துஷ்டன் எனவும் பெயர் வாங்குவன் என நீ துணிந்து கூறுவாயாக. [எ-று]

இப்பாடலில் இலக்கினத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment