Monday 13 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 270 - சுக்கிர மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்


வாழலாம் சுக்கிரதிசை சூரியபுத்தி
வகையில்லா மாதமது பனிரெண்டாகும்
நாளலாம் அதன்பலனை நவிலக்கேளு
நன்மையில்லா சுரபீடை நாய்கடிகளுண்டாம்
கேளலாம் சத்துருவும் குடிகேடுசெய்வான்
குணமான தாய்தந்தை மரணமதுவாகும்
வாழலாம் சித்தமதில் வெகு கலக்கமுண்டாம்
மனைவிதனைவிட்டேகி மலையாண்டியாவான்


இச்சுக்கிர மகாதிசையில் சூரிய பகவானின் ஆதிக்க காலம் 1 வருடமாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! ஜுரத்தினால் பீடையுண்டாகும். நாய் கடித்தல் போன்ற பிணியும் உண்டாம். பகைவர்கள் குடிகெட்டுப்போகும் வண்ணம் கேடு நினைத்து அதனை நிறைவேற்றவும் செய்வர். நல்ல குணம் பொருந்திய தாய், தந்தையின் மரணம் முதலியன சம்பவிக்கும். குறைவற வாழ்ந்த போதிலும் அறிவில் தெளிவின்றி வெகு கலக்கம் ஏற்படும். தன் துணைவியை விட்டுப்பிரிந்து ஆண்டியாகி மலைப்பிரதேசங்களுக்குச் செல்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment