Monday 13 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 269 - சுக்கிர மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்


காணவே சுக்கிரதிசை வருஷம் நாலைந்து
கனமான சுக்கிரனில் சுக்கிரன் புத்தி
பூணவே மாதமது நாற்பதாகும்
பூலோக மன்னரைப்போல புவியிலரசாள்வான்
பேணவே சவுக்கியங்க ளுண்டாகும்பாரு
பெரிதான லெட்சுமியும் பொற்கொடிபோல் வருவான்
தோணவே சோபனமும் சுபயோகமுண்டாம்
தோகையர்கள் வந்தவுடன் தொகுதியுடன் வாழ்வான்.


சுக்கிர மகாதிசை வருடம் மொத்தம் 20 ஆகும். இதில் சுக்கிர பகவானின் சுயபுத்தியான ஆதிக்க காலம் 3 வருடம் 4 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இச்சாதகன் பூமியில் ஓர் அரசனைப்போல வெகு சிறப்புடன் வாழ்வான். பலவிதமான சுக போகங்களும் உண்டாகும். பெருமை தரத்தக்க இலக்குமி தேவியானவள் இவனது மனையை விரும்பி ஒரு பொற்கொடி போல வந்து அமைவாள். சுப சோபனங்களும் சுபயோகங்களும் உண்டாகும். மனம் விரும்பிய மங்கையர் வாய்த்து பலவகையிலும் இன்பம் துய்த்து வாழ்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment