Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 233 - வியாழன் மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்


தானென்ற வியாழதிசை ஒருபத்தாறாம்
தன்மையுட னதன்புத்தி வருஷம் ரெண்டு
நானென்ற நாளதுவும் நாற்பத்தெட்டு
நன்றாக அதன்பலனை நவிலக்கேளு
கோனென்ற ராசாவும் குருவருளுமுண்டு
குறைவில்லா திரவியங்கள் வெகுலாபமுண்டாம்
ஆனென்ற பெண்கொடியாள் மனமகிழ்ச்சியுண்டாம்
மங்களமும் சோபனமும் வளருங்கலியாணம்


தன்னிரகற்ற வியாழ பகவானின் திசா காலம் வருடம் 16 ஆகும். அதில் அவரது புத்தி 2 வருடம் 1 மாதம் 18 நாள்களாகும். நன்மை தரத்தக்க வகையில் அவர் நிகழ்த்தும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! ஓர் அரசனைப் போல் மகிழ்வுடன் வாழும் வசதியான வாழ்வு நேரும். குருவினுடைய அருளும் வாய்க்கும்.குறைவில்லா வகையில் திரவியங்கள் வந்து சேர்தலும் நிறைந்த லாபம் வந்தடைவதோடு மனைவியால் மனமகிழ்ச்சி யுண்டாதலும் மங்களகரமான சுப சோபனம் நேர்தலும் இல்லத்தில் திருமணகாரியங்கள் நிகழ்தலும் நேரும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் வியாழன் மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment