Tuesday 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 165


சொல்லுகிறேன் அஞ்சுக்கு கிலேசனாவன்
சுயதேச பரதேச வாசம் சென்மன்
வில்லுகிறேன் விதிகுறைவு மெலிந்ததேகன்
விளங்குகின்ற புத்திரரும் பரந்து போகும்
புல்லுகின்றேன் பெரியோர்கள் கண்ணுற்றாலும்
பூதலத்தி லதிகாரி பெரியோர்நேசன்
நல்லதொரு திசைபுத்தி பொருளுஞ்சேரும்
நலமறிந்து செப்புவாய் சனிக்குதானே.


இன்னொரு கருத்தினையும் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு ஐந்தில் சனி நிற்பின் அவன் கிலேச முடையவனாவான். சொந்த ஊரிலும் பிற தேசங்களிலும் சென்று வாழும் ஜென்மமுடையவன். மேலும் விதி குறைந்தவன்; மெலிந்த தேகன். புத்திர நாசம் உடையவன். ஆனால் சுபர் பார்ப்பின் இந்நிலவுலகில் ஆட்சி செய்யும் அதிகாரியாக, பெரியோர்களால் விரும்பப்படுபவனாக வாழக்கூடியவனே. இதற்கு திசாபுத்தி வலுவறிந்து பலனை நிகழ்த்துக என்று போகமா முனிவரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment