Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 118


பாடுவாய் புந்தி வெள்ளி நாலில் நிற்க
பகருகின்ற பதியோனும் கேந்திரமேற
நாடுவாய் நாலுள்ளோன் சுபர்கள் நோக்க
நற்சுகமும் மேடையுண்டு நாடுமுள்ளோன்
கூடுவாய் குமரனுக்கு யோகம் மெத்த
குவலயத்தில் பேர் விளங்கோன் நிதியுமுள்ளோன்
ஆடிடுவாய் ஆரல் நிற்கும் நிலையைப்பார்த்து
அப்பனே புவியோர்க்கு கூறுவீரே


மற்றொன்றையும் கூறுவேன், கேட்பாயாக! பெருமை மிகு புதனும் சுக்கிரனும் இலக்கினத்திற்கு நான்காம் இடத்தில் நிற்க இலக்கினாதிபதியும் கேந்திரத்தில் நின்றால் எல்லா சுகபோகமும் உள்ளவன், மேலும் சுபர்களின் திருஷ்டி பெற்றால் பெருமைமிகு சுகமும், உப்பரிகை மேடையும் நாடும் உள்ளவன், இச்சென்மனுக்கு இந்நிலவுலகில் மிகவும் யோகம் உண்டென்றும் இவன் பெயரும் புகழும் விளக்கம் பெறும் என்பதும் இவன் வெகுதனம் உடையவன் என்பதும் நிதர் சனமே. எனினும் சூரியன் நின்ற இடத்தை நன்கு ஆராய்ந்து கூறுவாயாக என்று போகரது அருளாணையால் புலிப்பாணி உரைத்தேன்.

No comments:

Post a Comment